கோவையில் காலுறை விற்பனை செய்து வரும் முதியவரின் ஆன்லைன் பரிவர்த்தனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்தியாவில் புழங்கும் அளவிற்கு வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ரொக்க பரிவர்த்தனை கிடையாது. இதனால் இந்திய அரசும், வங்கிகளும் ஆன்லைன், கடன் அட்டை, டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் வங்கிகளில் ஆன்லைன் மூலமான பரிவர்த்தனையில் ஓரளவு பாதுகாப்புத் தன்மை உறுதியானதைத் தொடர்ந்து தற்போது ஆன்லைன் மூலமான வர்த்தகம் செய்வதும் பண பரிவர்த்தனை மேற்கொள்வதும் அதிகரித்துள்ளது.
மக்கள் வெளியில் செல்லும் பொழுது கையில் பணம் இல்லை என்றால் இந்த ஆன்லைன் பரிவர்த்தனையான UPI எனப்படும் Gpay, phonepay, paytm உள்ளிட்ட செயலி மூலம் ஹோட்டல், டீ கடை,மளிகை கடை, பெட்ரோல் பங், துணிக்கடைகள் என தாங்கள் வாங்கும் பொருளுக்கான பணம் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 30வருடமாக எழுதுகோல் மற்றும் காலுறை விற்று வரும் சாலையோர வியாபாரியான கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்த முதியவர் ஜேக் அப்துல் என்பவர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கான QR பலகையை கழுத்தில் மாட்டிக் கொண்டு விற்பனை செய்து வருகிறார்.
தள்ளாடும் வயதிலும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் இந்த முதியவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியாபார உத்தியை பயன்படுத்தி வர்த்தகம் செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.