அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது என்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, கோவை, கன்னியாகுமரி பாண்டிச்சேரி ஆகிய 4 முனைகளில் இருந்து சைக்கிள் பேரணி துவக்கி உள்ளனர்.
சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த பேசிய வாலிபர் சங்கத்தின் கேரளமாநில துணை செயலாளர் ஜெய்க்.சி.தாமஸ் பேசுகையில், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அம்பாசிடராக தமிழக முதல்வர் ஸ்டாலினோ அல்லது கேரள முதல்வர் பினராயி விஜயனோ விளம்பர மாடலாக வந்தால் நமது மக்கள் எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள். ஆனால் அம்பானியின் ஜியோ செல்போன் சிம்கார்டு வாங்குவதற்கு விளம்பரமாடலாக அனைத்து பத்திரிகையின் முன்பக்கத்திலும் நமது பாரத பிரதமர் மாடலாக வந்ததை இந்த நாடு பார்த்துக்கொண்டிருந்தது. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் வருவாய் இன்றி அவதிப்படுவது குறித்த கவலை நமது பிரதமருக்கு இல்லை. அம்பானி, அதானியின் வளர்ச்சியில் எவ்வளவு நாம் பங்காற்ற முடியும் என்கிற வேகம்தான் நமது பிரதமர் மோடியிடம் உள்ளது. ஆகவே இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கிற அமைப்பாக இடதுசாரிகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் தான் உள்ளது. நேற்றைய தினம் தலைநகர் டில்லியில் திட்டமிட்டு மத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு டில்லி பாஜக அதிகாரத்தில் உள்ள மாநகராட்சி பகுதியான ஜாகீங்கிர்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்கிற பெயரில் இஸ்லாமி மக்களின் வீடுகளை புல்டவுசர் கொண்டு இடித்துக்கொண்டிருந்தது. உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையிலும் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த சம்பவம் நடைபெற்றது. டில்லியில் நமக்கு எம்பி, எல்எல்ஏ/ கவுன்சிலர்கள் கூட கிடையாது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் ஒற்றை ஆளாக புல்டவுசர் முன் நின்று தடுத்த காட்சிகளை நாடே பார்த்தது. ஆகவே உழைக்கும் மக்களின் நலன் காக்க சமரசமின்றி போராடுகிற இயக்கம் இடதுசாரிகள் இயக்கம் மட்டுமே. அந்த வகையில் இங்கு வாலிபர் சங்கம் துவக்கும் இந்த சைக்கிள் பயணம் நிச்சயம் ஆளுகிற அரசை அடிபணியவைக்கிற போராட்டமாக இருக்கும் என்றார்.