tamilnadu

img

பாதுகாப்புத்துறையில் இறக்குமதி செலவுகள் குறைக்கப்படுமா பி.ஆர்.நடராஜன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் மழுப்பல் பதில்

பாதுகாப்புத்துறையில் இறக்குமதி செலவுகள் குறைக்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அரசுத்தரப்பில் மழுப்பலான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், பாதுகாப்புத்துறையில் இறக்குமதி செலவுகளைக் குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு கொள்கை முடிவுகள் எதுவும் எடுத்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், மேலும் பாதுகாப்புத்துறையில் அந்நிய மற்றும் உள்நாட்டுத் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறதா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட்,  இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை வரும் வருடங்களில் குறைப்பதற்காக, பாதுகாப்பு கருவிகளின் உற்பத்தி மற்றும் மேம்பாடு, உள்நாட்டு வடிவமைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து கடந்த சில வருடங்களாக பல கொள்கை முன்னெடுப்புகளை அரசு எடுத்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டிற்கு 74 சதவீதம்வரை அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் நவீன தொழில்நுட்பங்களை அணுக வாய்ப்புள்ள நிலையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் நாட்டின் பாதுகாப்பினை பாதிக்கின்ற அல்லது பாதிக்குமோ என தோன்றுகின்ற எந்தவொரு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட அந்நிய முதலீட்டையும் மறுபரிசீலனை செய்கின்ற உரிமை அரசாங்கத்தின் கையில் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.