கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை சரமாரியாக தாக்கியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த வர்ஷினிபிரியா இன்று அதிகாலை சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கனகராஜ் மற்றும் வர்ஷினிபிரியா. இவர்கள் காதலித்தனர். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கனகராஜ் மற்றும் வர்ஷினி மேட்டுப்பாளையம் அருகே ஸ்ரீரங்கராயர் ஓடை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் மீது ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் மரணமடைந்தார். படுகாயமடைந்த வர்ஷினிபிரியா, சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பட்டியலின பெண்ணை திருமணம் செய்ததற்காக, சொந்த தம்பியையே கொலை செய்திருக்கிறார் கனகராஜின் அண்ணன் வினோத். இதனையடுத்து தலைமறைவாக இருந்த வினோத் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, படுகாயமடைந்த வர்ஷினி பிரியா கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வர்ஷினி பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.