tamilnadu

img

தலைமை உத்தரவை மீறி பேரூராட்சி தலைவர் தேர்வு: சிபிஎம் வேட்பாளரை அறையில் அடைத்து திமுகவினர் அராஜகம்

பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்ட சிபிஎம் வேட்பாளரை மனுதாக்கல் செய்யவிடாமல் தாக்கி தனி அறையில் அடைத்தனர். பின்னர் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் துணையுடன் தன்னிச்சையாக திமுக கவுன்சிலர் ஒருவரை பேரூராட்சி தலைவராக அறிவித்தனர். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத்தலைவர் பொறுப்பிற்கு கூட்டணி கட்சிகளுக்கான இடங்களையும் பேச்சு வார்த்தை நடத்தி  திமுக தலைமை அறிவித்தது. அதில்  கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையேற்று மார்க்சிஸ்ட் கட்சி பெரியநாயக்கன்பாளைய பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு பேரூராட்சி மன்ற உறுப்பினர் என்.சிவராஜ் அறிவிக்கப்பட்டார். 
இந்நிலையில் வெள்ளியன்று என்.சிவராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தலைவர் பொறுப்பிற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றனர். அப்போது அங்கிருந்த திமுகவினர் என்.சிவராசை மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான என்.பாலாமூர்த்தியை கடுமையாக தாக்கினர். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியினர்  என்.சிவராஜ், சிபிஎம் நிர்வாகிகள் கே.மனோகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட அனைவரையும்  தனி அறையில் அடைத்தனர்.
 இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அறையில் அடைத்துவைத்துவிட்டு, தன்னிச்சையாக திமுகவை சேர்ந்தவரை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.  திமுகவினர் இந்த அராஜக நடவடிக்கைகளுக்கு காவல்துறையும் துணையாக நின்றது. திமுக தலைமையின் அறிவிப்பை ஏற்காமல் பெரியநாயக்கன்பாளையம் பகுதி திமுகவினர் தன்னிச்சையாக முடிவெடுத்து அராஜக  நடவடிக்கையில் ஈடுபட்டது  மார்க்சிஸ்ட் கட்சியினரை அதிர்ச்சியடையச்செய்துள்ளது. 
இதனைத்தொடர்ந்து திமுகவினரால் தாக்கப்பட்ட  என்.பாலமூர்த்தி பெரியநாயக்கன்பாளைய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் தன்னை தாக்கிய அடையாளம் தெரிந்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனுவை அளித்தார். இதேபோன்று பெரியநாயக்கன்பாளைய பேரூராட்சி மன்ற சிபிஎம் உறுப்பினர் என்.சிவராஜன் பேரூராட்சி செயல் அலுவலரிடம்,  ஜனநாயக முறைப்படி என்னை மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து சட்டவிரோதமாக தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார். 
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட திமுக தலைமை எடுத்த முடிவுகளை  சற்றும் மதிக்காமல் உள்ளூர் திமுகவினர் அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டது பல்வேறு தரப்பினர் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. அப்பகுதி மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.