தலித் பெண் கொடூர கொலை குறித்த தடயங்களை மறைக்கும் நோக்கத்தோடு ஊடகத்தின் செயல்பாட்டை தடுக்கும் உத்திரபிரதேச மாநில யோகி அரசை கண்டித்து கோவையில் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸில் தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில் ஊடகத்தினர் யோகி அரசை அம்பலப்படுத்தினர். இறந்த அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் கூட வழங்காமல் காவல்துறையினர் எரித்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் செய்தி சேகரிக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் தாண்டி செய்தி சேகரிக்க சென்ற பெண் ஊடகவியலாளர் மற்றும் ஒளிப்பதிவாளரையும் அங்குள்ள காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, தாக்கியதோடு அப்புறப்படுத்த முயன்றனர். குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஊடகத்தின் குரல்வளையை நசுக்கும் உத்திர பிரதேச மாநில யோகி அரசை கண்டித்து கோவையில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர். உ.பி அரசையும், காவல்துறையினரையும் கண்டித்தும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.