பொள்ளாச்சி அருகே கோயில் சுவர் இடிந்து விழுந்த நிலையில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த, வேட்டைக்காரன்புதூர் எட்டித்துரை பகுதியை சேர்ந்த முத்துலட்சுமியின் மகன் ஹரி, 13. இவர் நேற்று மாலை, அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான நித்தீஸ், 11, நிர்மல், 14, ஆகியோருடன் எட்டித்துரை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். கனமழையால் அப்பகுதியிலுள்ள புத்துமாரியம்மன் கோவிலில் ஒதுங்கி நின்றனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் நடராஜ், 50,கோபால் என்கிற பிரபு, 35, அங்கு மழைக்கு ஒதுங்கியிருந்தனர்.
இரவு, 7:30 மணிக்கு மேல் கனமழையால் எதிர்பாராத விதமாக கோவிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், இருவரும் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். கனமழையால் நீண்ட நேரம் கழித்து அங்கு வந்த மக்கள் அவர்களை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனை அனுப்பினர். அப்போது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் ஹரி மற்றும் நடராஜ் பரிதாபமாக இறந்தனர். காயமடைந்த நித்தீஸ், நிர்மல் மற்றும் பிரபு சிகிச்சை பெறுகின்றனர்.
தகவலறிந்து, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.