tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் நாளை முதல் திண்டுக்கல் மதுரை இடையே ரத்து

திருப்பூர், மே 13 – மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக கோவை – நாகர்கோவில் விரைவு பாசஞ்சர் ரயில் திண்டுக்கல் மதுரை இடையே மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.இதுதொடர்பாக திங்களன்று தென்னக ரயில்வே சேலம் கோட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வண்டி எண் 56320 கோவை – நாகர்கோவில் விரைவு பாசஞ்சர் ரயில் திண்டுக்கல் – மதுரை இடையே மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. எனவே கோவையில் இருந்து புறப்படும் ரயில் திண்டுக்கல் வரை செல்லும். அதேசமயம் வண்டி எண் 56319 பாசஞ்சர்விரைவு ரயில் திண்டுக்கல் முதல் கோவை வரை ஏற்கெனவே உள்ள அட்டவணை நேரப்படி இயக்கப்படும்.அதேபோல் மறுமார்க்கத்தில் வண்டி எண் 56319 நாகர்கோவில் – கோவை விரைவு பாசஞ்சர் ரயிலும் மதுரை – திண்டுக்கல் இடையே மேற்படி மே 15 முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதால், அந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். மறுபடியும் வண்டி எண் 56320 என மாற்றம் செய்யப்பட்டு அதே அட்டவணை நேரப்படி மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்குத் திரும்பச் செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.


குப்பாண்டம்பாளையம் சாய ஆலையில் தீ விபத்து

திருப்பூர், மே 13 -திருப்பூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (46). இவர் பல்லடம் ரோடு, குப்பாண்டம்பாளையம், நத்தகாட்டு தோட்டம் பகுதியில் சாய ஆலை வைத்துள்ளார். இவர் நிறுவனத்தில் துணிகளுக்கு சாயமேற்றுவதற்காக பல பின்னலாடை நிறுவனங்களிலிருந்து தினசரி பல ஆயிரம் கிலோ துணிகள் வருகின்றது. இந்நிலையில், இந்த ஆலையின் பின்புறம் ரசாயனங்கள் இருப்பு வைக்ககூடிய கிடங்கு உள்ளது. அந்த கிடங்கில் துணிகளுக்குசாயமேற்ற பயன்படுத்தியது போக மீதமிருந்த நைட்ரஜன் பெராக்சைடு ரசாயனம் தேக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் திங்களன்று மதியம் அந்த கிடங்கிலிருந்து கரும் புகை வெளியேறியது. இதனை பார்த்த நிறுவன ஊழியர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ரசாயனம் மற்றும் காலி பிளாஸ்டிக் கேன்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுக்கடைகளுக்கு விடுமுறை

திருப்பூர், மே 13-கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல்வாக்குப்பதிவு எதிர்வரும் மே 19 ஆம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு மே 17, மே 18 மற்றும் மே 19 ஆம் தேதியும்,நாடாளுமன்ற தேர்தல் - 2019 வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. எனவே, இதை முன்னிட்டு அன்றைய தினங்களில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமதுபானக் கடைகள்,  மதுபானக் கூடங்கள் மற்றும் ஏனையஉரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட்டு மது  விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.