தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர், மே 29-திருப்பூரில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளியன்று நடைபெற உள்ளது.இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 31ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், தனியார் துறையில் வேலை அளிப்பவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆகவே, வேலை தேடும் நபர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயன்பெறலாம்.தகுதியிருப்பின், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேர்வதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் பிராணிகள் வதைச் சட்டத்தில் கைது
திருப்பூர், மே 29 -திருப்பூரில் 10க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொலை செய்தவரை காவல் துறையினர் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர் கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் கோபால் (33). மீன் வியாபாரியான இவர் இரவு நேரங்களில் தனது வீட்டுக்கு வரும்போது, வழியில் தெரு நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்ப்பு நாய்கள் தொடர்ந்து குரைத்து தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து இரவு நேரம் இருசக்கர வாகனத்தில் வரும்போது விஷம் வைத்த தின்பண்டத்தை நாய்களுக்கு வீசிச் சென்றார். இந்த விஷத் தின்பண்டங்களைத் தின்ற 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஓரிரு நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தன.மொத்தமாக 10க்கும் மேற்பட்ட நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில்் அப்பகுதி குடியிருப்புவாசிகள் வீடுகளில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்தனர். அதில் மீன் வியாபாரி கோபால் வாகனத்தில் செல்லும்போது விஷம் வைத்த பண்டங்களை நாய்களுக்கு வீசிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.இதையடுத்து இப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் கடந்த 26 ஆம் தேதி திருப்பூர் வடக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருப்பூர் வடக்கு காவலர்கள் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் மீன் வியாபாரி கோபாலை புதனன்று கைது செய்தனர்.
சட்டவிரோத லாட்டரி விற்பனை: மூவர் கைது
திருப்பூர், மே 29–திருப்பூர் பெருமாநல்லூர் சாலை கணக்கம்பாளையம் பிரிவில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தது தொடர்பாக செல்வநாயகம் (23), பொங்குபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு (41), இசக்கிப்பாண்டி என்கிற சிவா (24) ஆகிய மூன்று பேரை பெருமாநல்லூர் காவல் நிலையத்தார் கைது செய்தனர். இவர்களிடம் லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 600 பணம் கைப்பற்றப்பட்டது. மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.