tamilnadu

img

அசாதாரண சூழலும் அரசியல் செய்யும் அதிமுக

கோவை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எல்லைகளை மறந்து உலகமே ஒன்றிணைந்து மனிதகுலத்தை காக்க வேண்டும் என்கிற ஒற்றை லட்சியத்தோடு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ஆனால் இதற்கு மாறாக கோவையில் அரசு வழங்கும் நிவாரண பொருட்களை அதிமுகவினர் வழங்குவதுபோல தோற்றத்தை ஏற்படுத்தி வருவது அருவருப்பை ஏற்படுத்தி வருகிறது.  கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு பொட்டலங்கள் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் மாநகராட்சி வாகனங்கள் அனைத்திலும் அதிமுக மாவட்ட கழகத்தின் ப்ளக்ஸ் பேனர் கட்டி இக்கட்சியின் சார்பில் அப்பணிகள் நடைபெறுவதாக காட்டிக்கொண்டு வருகின்றனர்.

இதனைக்கூட பெரிதாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது ரேஷன் கடைகளின் மூலமாக வழங்கப்படும் விலையில்லா சமையல் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை ஆகியவற்றை தங்கள் கட்சி வழங்குவதாக பெரும் கூட்டத்தை சேர்த்தி அதிமுகவினர் அரசியல் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக, கொரோனா  நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்கள்  வரும் ஒன்றாம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை வரும் வியாழக்கிழமை முதல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை  வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுநோய் என்பதால் யாரும் கூட்டம் சேரக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் மணிக்கொருமுறை ஊடகங்களில் தோன்றி தனித்திரு, விழித்திரு என மக்களுக்கு போதனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இது தனது கட்சிக்காரர்களுக்கு பொருந்தாது என்பதை போன்ற நிகழ்வுகளை அதிமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கோவை ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் செவ்வாயன்று அதிமுகவினர் ரேஷன் அட்டை வைத்திருக்கும் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரத்தினபுரி பள்ளியில் ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் எவ்வித சமூக விலகல் இன்றி பள்ளி முன்பாக குவிந்தனர். ஆளும்கட்சியினர் ஏற்பாடு என்பதால் இக்கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொள்ளாமல் கைகட்டி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு டோக்கன் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் முண்டியடித்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  

இதுகுறித்த தகவல் ஊடகத்தினரால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்பின் அங்கு வந்த அதிகாரிகள் தினமும் 100 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து பயனாளிகளுக்கும் நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் கிடைக்கும் எனவும், பொதுமக்கள் ஒரே நேரத்தில் சமூக விலங்கிலிருந்து கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.  ஆனால் கூட்டத்தை கூட்டிய அதிமுகவினர் குறித்து எதையும் அதிகாரிகள் கண்டுகொண்டதாய் தெரியவில்லை.  ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களில்கூட அதிமுக ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் கடும் விமர்சனத்தை எழுப்பியது. இதன்பின்னரும் அவர்கள் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை  என்பதைப்போல் தற்போதைய அசாதாரண சூழலிலும் அரசியல் ஆதாயத்தை தேடும் அதிமுகவினரின் நடவடிக்கைகள் சமூக ஆர்வலர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.