tamilnadu

img

கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு நடவு துவக்கம்

ஈரோடு, மே 15-கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிக் கிழங்கு நடவு துவங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பூர் மலைக் கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறுவடை கடந்தஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கடம்பூர் மலைப் பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது புதிய மரவள்ளி நடவை துவங்கியுள்ளனர்.அதேநேரம், மரவள்ளி நடவு செய்யும் பகுதிகள் அனைத்தும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் வனவிலங்குகள் தொடர்ந்து மரவள்ளி பயிரிட்டுள்ள காடுகளுக்கு வந்து சேதப்படுத்திவருவது வழக்கம். இதனை தடுக்க அப்பகுதியில் விவசாயிகள் தங்களின் நிலங்களை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர். இருப்பினும் அதையும் தாண்டி விவசாய பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வருகிறது. இதனைதடுக்க வனத்துறை அதிகாரிகள்வனப்பகுதி எல்லையில் அகழி அமைத்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த மரவள்ளி கிழங்கு நடவானது வரும் இரண்டு மாதங்களுக்கு மலைப் பகுதி முழுவதும் நடைபெறும். சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு மேல் மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும். மரவள்ளிக் கிழங்கு மழையை எதிர்பார்த்தே பயிரிடப்படுகிறது. தொடர்ந்து மழை பொழிவு இருந்து வருவதால் தற்போது பணியைத் தொடங்கியுள்ளோம். அடுத்த மூன்று மாதங்களில் தொடர்ந்து லேசான மழை பொழிவு இருந்தால் அனைத்தும் துளிர்விடும். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் களை எடுத்தல், இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற வேலைகளை படிப்படியாக செய்வோம். அதேநேரம், வனவிலங்குகள் வனப்பகுதியில் வந்து விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.