பொள்ளாச்சி, மார்ச் 10- பொள்ளாச்சி புதிய திட்ட சாலைக்கு மகாத்மா காந்தி சாலை என பெயர் மாற்றம் செய்யக்கோரி, பொள்ளாச்சி அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி புதிய திட்ட சாலை கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப் பட்டது. தற்போது வரை ஆங்கிலத்திலேயே ’நியூஸ்கீம் ரோடு’ எனும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சாலையின் பெயரை மகாத்மா காந்தி சாலை என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென திங்களன்று பொள்ளாச்சி நகராட்சி ஆணையரிடம் அனைத்து கட்சி கூட்டியக்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், திமுக நகரச் செயலாளர் வரதராஜன், சிபிஎம் தாலுகா செயலாளர் கே.மகாலிங்கம், சிபிஐ நகரச் செயலாளர் சண்முகம், காங்கிரஸ் நகர தலைவர் அருள், தந்தை பெரியார் திராவிடர் கழக வெளியீடு செயலாளர் இரா. மனோகரன், நகர செயலாளர் பழ.அசோக், விசிக மாவட்டச் செயலாளர் ச.பிரபு, மமக நகரத் தலைவர் முத்து பாய், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், தமுமுக மாவட்ட தலைவர் கபூர், தா.மா.க நகரத் தலைவர் செல்லதுரை, ஆ.பேரவை கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.