tamilnadu

img

பெருமாநல்லூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி, ஜூன் 3-பெருமாநல்லூர் ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டத்துக்காளியம்மன் கோயில், தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக ஆற்றுக் குடிநீர், ஆழ்துளை கிணற்று நீர் ஆகியவை சீராக வழங்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பெருமாநல்லூரிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் திங்களன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த பெருமாநல்லூர் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரிரு நாள்களுக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சாலை மறியல் போராட்டத்தால் அச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.