tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைத்தீர்க்கும் கூட்டம்

கோபி, செப்.3-  கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைக்களைக் கேட்கும் பொருட்டு மாதந்தோறும் கோட்ட அளவில் மாற்றுதிறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த மாதங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர், உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் மாதாந்திரக் கூட்டம் முதல் முறையாக கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கோட்டாட்சியர் மனுக்களாக பெற்றுக் கொண்டார். இதில் பெரும்பாலான கோரிக்கைகளாக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வேண்டும் என்பதே ஆகும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என்று கோட்டாட்சியர்  தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்தில் செப்.3 ஆம் தேதி முதல் செப்.6. ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாற்றுதிறனாளிகள் வருவாய் அலுவலகத்தை அணுகி முறைப்படி பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், வருவாய்துறையினர் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.