கோவை, ஜூலை 7- தமிழகத்தில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதி கரிப்பால் நாளொன்றுக்கு 5,000 மெகாவாட் கிடைக்கி றது. தமிழகத்தில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 25 முதல் 28 சதவிகிதம் வரை தமிழகத்தின் மின் தேவைகள் பூர்த்தி செய்து வருகிறது. பல்லடம், உடுமலை, நெல்லை, கயத்தாறு, தேனி மற்றும் கன்னி யாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன. காற்றாலைகள் மே முதல் செப்டம்பர் இறுதி வரை அதிக மின்சார உற்பத்தியைக் கொடுக்கும். மே மாதத்திற்கு முன்பு நாளொன்றுக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகி வந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தட்டுப்பாடு ஏற்பட்டு, அவ்வப்போது அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், காற்றின் வேகம் அதிகரித்த காரணத்தால் தற்போது 5 ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தி சங்கத்தின் அகில இந்திய தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறுகையில், காற்றின் வேகம் தற்போது அதிகமாக உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கு தன்னிறைவை கொடுத்திருக்கிறது. செப்டம்பர் மாதம் இறுதி வரையில் இதே அளவு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.