பொள்ளாச்சி, மே 26-பொள்ளாச்சி அருகே நவமலையில் தொடர் காட்டு யானை தாக்குதலில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மனித விலங்கு மோதல்களை தடுத்திடக் கோரி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை வனப்பகுதியில் வெள்ளியன்று இரவில் ரஞ்சனா (7) என்ற சிறுமியை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள், மாகாளி (52) என்பவர் சனியன்று இரவு வீட்டிற்கு வெளியில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த காட்டு யானை அவரை மிதித்துக் கொன்றது. கடந்த 3 மாதத்திற்கு முன்னரேபொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கத்திடம் வன ஊழியர் ராஜு என்பவர் மனித விலங்கு மோதலால் மனித உயிரிழப்புகள் ஏற்படவாய்ப்புள்ளதாக புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வனத்துறைநடவடிக்கை எடுத்திருந்தால்வெள்ளியன்று யானை தாக்கிஉயிரிழந்த சிறுமி ரஞ்சனா மற்றும்மாகாளி ஆகியோரின் உயிரிழப்புதடுக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறை மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிறன்று காலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் தலைமையில் நவமலை வனப்பகுதியில் வட்டாட்சியர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரைச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொடர் மனித- விலங்கு மோதல்களை தடுத்து நிறத்த ஆயுத்தப் பணிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நவமலை வனப்பகுதியிலுள்ள பழங்குடியின மக்களை தற்காலிகமாக நவமலை அருகே உள்ள மின்வாரிய கட்டிடங்களில் தங்க வைக்க வேண்டும். குரங்கு அருவி முதல் நவமலை மின் உற்பத்தி நிலையம் வரையில் தொடர் மனித விலங்கு மோதல்களைத் தடுத்திடும் வகையில் குழுஅமைக்கப்பட்டு வாகன வசதிமேற்கொள்ளவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் வரையிலான நிவாரண தொகையினை உடனடியாக வழங்கவும், அலட்சியமாக செயல்படும் வனச்சரகர் காசிலிங்கத்தை பணி நீக்கம்செய்ய வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் நவமலை வனப்பகுதியில் வசிக்கின்ற40 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தரமான தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.இப்பேச்சுவார்த்தையில் வால்பாறை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ம.விவேகானந்தம், ஆழியார் காவல் ஆய்வாளர் சுப்ரமணியம் மற்றும் ஆனைமலை வட்டாட்சியர் த.வெங்கடாச்சலம் (பொறுப்பு) ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஆனைமலை தாலுகா தலைவர் ஏ.அம்மாசை, ஆர்.தங்கவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆனைமலை பொருளாளர் செல்வம், ஆழியார் சிபிஎம் கிளை செயலாளர் ஆர். ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.