tamilnadu

கோவையில் பூக்கள் விலை அதிகரிப்பு பூமார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்

கோவை, அக்.4- ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாக்கள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாக்கள் வரும் அக். 7  மற்றும் 8 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பல்வேறு பொருட்களுக்கும், கத்தி, அறிவாள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பொட்டு வைத்து பூக்களால் அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இதேபோல், வெவ்வேறு தொழில்துறையினரும் தங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் தொழில் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி தடவளப்பொருட்களையும் பூக்களால் அலங்கரித்து வழிபடுவது வழக்கம். இந்த விழாக்களை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக கோவை பூமார்க்கெட்டை நோக்கி தற்போது முதலே படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளியன்று பூமார்க்கெட் பகுதியில் கூட்டநெரிசல் அதிகரித்தது. அதேநேரத்தில் பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்ட செவ்வந்தி பூ தற்போது ரூ.220 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதேபோல், கிலோ ரூ.500 முதல் ரூ.600க்கு விற்பனையான மல்லிகை தற் போது ரூ.800 முதல் ரூ.850 வரை விற்பனையாகிறது. இதே போல், வெவ்வேறு பூக்களின் விலையும் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, அரளி கிலோ ரூ.350 க்கும், ரோஜா ரூ.250 க்கும், சம்மங்கி ரூ.200 க்கும், சாமிப்பூ (ஒரு முழம்) ரூ.30 க்கும் விற்பனையாகிறது. வாழைக்கன்று (2க்கு) ரூ.100க்கு விற்பனையாகிறது. இன்று மற்றும் நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பூமார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.