ஈரோடு, மே 14-தலித் மக்கள் கோவிலில் நுழைவதை தடுக்கும் வகையில் சாதிய ஆதிக்க சக்தியினர் திட்டமிட்டு பதட்டத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் எழுநூத்திமங்கலம் கிராமத்தில் மாரியம்மன்-பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இக்கோவிலில் தலித் மக்களை அனுமதிக்காமல் சாதிய ஆதிக்க சக்தியினர் மட்டும் திருவிழா நடத்துவதை தவிர்த்து அனைவரும் சேர்ந்து திருவிழா நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. இதனடிப்படையில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சேர்ந்தே திருவிழா நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து சமூகத்தினரையும் சேர்த்து திருவிழா நடத்தப்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டு மீண்டும் சாதிய ஆதிக்க சக்தியினர் மட்டும் தனியாக திருவிழா நடத்த முயற்சித்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அனைவரும் சேர்ந்து திருவிழா நடத்தினால்தான் அனுமதிக்க முடியும் என வட்டாட்சியர் கூறியுள்ளார். ஆனால் சாதிய ஆதிக்க சக்தியினர் கோவிலுக்கு எதிர்ப்புறம் உள்ள தனியார் இடத்தில் திருவிழா நடத்துவதாகவும், அதற்காக கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.இந்நிலையில், சாதிய ஆதிக்க சக்தியினர் அருகிலேயே மேலும் ஒரு கோவிலை அமைத்து அதிக பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதையடுத்து உடனடியாக தனியார் நிலத்தில் அமைக்கப்படவுள்ள கோவிலுக்கு தடை விதித்து ஒரே கோவிலில் அனைவரும் சேர்ந்து திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் செவ்வாயன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடுமுடி ஒன்றிய செயலாளர் இளையராஜா, தீண்டாமை ஒழிப்பு தாலுகாதலைவர் தங்கவேல் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.