திருப்பூர், மே 14 –திருப்பூரில் பனியன் நூல் விலை கிலோவுக்கு ரூ.11 வரை உயர்ந்திருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து குளிர்கால ஆடைகள் தயாரிக்க, ஆர்டர் எடுப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்குப் பயன்படும் பருத்தி நூல் விலை கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது, அதேபோல் மே மாதமும் ரூ.5 உயர்ந்துள்ளது. இரு மாதங்களில் கிலோவுக்கு ரூ.11 வரை விலை உயர்ந்திருப்பதுடன், ஜூன் மாதமும் நூல் விலை உயரும் வாய்ப்புள்ளது என்று நூல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
பருத்தி உற்பத்தி சரிவு
இந்தியாவில் நடப்பு பருத்தி ஆண்டில் பஞ்சு உற்பத்தி எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்துள்ளது. ஏற்கெனவே 360 முதல் 370 லட்சம் பேல் வரை பஞ்சு உற்பத்தியாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் அதில் சுமார் 50 லட்சம் பேல்கள் குறைந்து 320 லட்சம் பேல் பஞ்சு மட்டுமே சந்தைக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பருத்தி விளைவிக்கும் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்தது, பருத்தி விளைவிக்கும் பாசனப் பரப்பு குறைந்தது, கடன் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பருத்தி உற்பத்தி குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.இங்கு பருத்தி உற்பத்தி குறைந்திருப்பதால் உள்நாட்டுத் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சு விலை அதிகரித்து, இதன் தொடர்ச்சியாக நூல் விலை உயர்ந்து வருகிறது என்று நூல் மில்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தேர்தலால் பாதிப்பு
அதேசமயம் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் பணப்புழக்கம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதால், பல மாநிலங்களில் உள்நாட்டு ஜவுளிச் சந்தையில் வியாபாரம் குறைந்திருக்கிறது. எனவே ஜவுளி உற்பத்தியும் மட்டுப்பட்டுள்ளது என்பதால் நூலின் தேவை அதிகரிக்கவில்லை. உள்நாட்டுச் சந்தையில் வாங்கும் நிலை இல்லாதபோது, நூல் விலை உயர்ந்தாலும் விற்பனை பாதிக்கும் என்றும் நூல் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
வெளிநாட்டு ஆர்டர்
அதேசமயம் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலைப் பொறுத்தவரை ஏற்றுமதி சந்தையில் ஆடை தயாரிப்புக்கு நூல் தேவைப்படுகிறது. குறிப்பாக தற்போது மே மாதத்தில் அடுத்த குளிர்கால பருவத்திற்கான ஆடைகள் உற்பத்திக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கும். எனவே குளிர்கால ஆடை உற்பத்திக்கு நூல் தேவை இருக்கிறது. இந்நிலையில் நூல் விலை உயர்ந்தால், வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து ஆர்டர்களைப் பெறுவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக வெளிநாட்டு வர்த்தகர்கள் இங்கு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு விலைநிர்ணயம் செய்வதில், உற்பத்தி நிலைகளில் ஒவ்வொரு செலவையும் மிகத் துல்லியமாக கணக்கிட்டு, குறைந்தபட்ச விலைக்கு ஆடைகளை தயாரித்துத் தரும்படி வற்புறுத்துகின்றனர். போட்டி மிகுந்த சூழ்நிலையில் வர்த்தகர்கள் சொல்லக்கூடிய விலையை ஏற்றுக் கொண்டு ஆர்டர்களை செய்து தர வேண்டிய நிலை ஏற்றுமதியாளர்களுக்கு உள்ளது.
ஆர்டர் பெறத் தயக்கம்
இவ்வாறு முன்கூட்டியே விலையைத் தீர்மானித்துவிடும் நிலையில், ஆடை தயாரிப்பில் ஏதேனும் ஒரு வகையில் செலவு கூடினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக நூல் விலை உயர்ந்தால் ஆர்டருக்கு பெற்ற விலை கட்டுப்படியாகாது. எனவே நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஏற்றுமதியாளர்களுக்கு வெளிநாட்டு குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்களைப் பெறுவதில் தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதிலும் மிகப்பெரிய ஏற்றுமதி தொழிற்சாலைகள் சொந்தமாக நூற்பாலைகள் முதல் ஆடை தயாரிப்புக்கான அனைத்து உப தொழில் பிரிவுகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டிருப்பதால் அவர்கள் வெளிநாட்டு வர்த்தகர்களிடம் ஆர்டர்களுக்கான விலையை பேரம் பேசி குறைத்து வாங்க முடிவதுடன், அனைத்து நிலையிலும் உற்பத்திச் செலவையும் கட்டுப்படுத்த முடிகிறது. ஆனால் நடுத்தர, சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் இதுபோல் செய்ய முடியாது. அவர்கள் சந்தையின் கட்டுப்பாட்டில் ஏற்ற இறக்கங்களின் பாதிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இவர்களைப் பொறுத்தவரை நூல் விலையை குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்களுக்கு மாற்றமின்றி நிலையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் குளிர்கால ஆடை ஆர்டர்களை எவ்வித தயக்கமும் இன்றி பெற முடியும் என்று தெரிவித்தனர்.ஆனால் தாராளமய கொள்கை காரணமாக நூல் விலையைக் கட்டுப்படுத்த அரசு தலையீடு செய்யாது என்பதே இப்போதைய நிலவரமாக உள்ளது. எனவே வரக்கூடிய நாட்களில் தொடரும் நூல் விலை உயர்வு, திருப்பூர் ஏற்றுமதி தொழிலை பாதிக்கும் என்பதே கசப்பான உண்மையாகும்.