tamilnadu

ஆக., செப்., பருவமழைக்கு வாய்ப்பு வேளாண் பல்கலை. தகவல்

 கோவை, ஜூலை 20- தென்மேற்கு பருவமழை தொடங்கியும் எதிர் பார்த்த மழை இல்லாத நிலையில், இனி ஆகஸ்ட்  மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் பருவமழை யை எதிர்பார்க்க முடியும் என்று வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் சற்று தாமதமாகவே மழை தொடங்கி யது. கோவையை பொறுத்தவரையில் கடந்த 50 ஆண்டுகளில் 210 மி.மீட்டர் என்று சராசரி மழை பெய்துள்ளது. இதே சராசரியை நடப்பு ஆண்டிலும் எதிர்பாக்கலாம் என்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  ஆனால், காற்றின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோவையில் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்கவில்லை. இந்நிலையில், நடப்பு மாதத்தில் மழையை அதிக அளவில் எதிர்பார்க்க முடியாத நிலை இருப்பதாகவும், அடுத்து வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தான் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வேளாண் பல் கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.