கோட்டயம், ஜுன் 8- தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பாத கல்லூரி மாணவியின் சடலம் திங்களன்று மீனச்சல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது. தேர்வில் காப்பியடித்து பிடிபட்ட நிலையில் தேர்வு அறையில் இருந்து வெளியேறி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காஞ்ஞிரப்பள்ளியைச் சேர்ந்தவர் அஞ்சு பி ஷாஜி (20). பட்டப்படிப்பு மாணவியான இவர் ஞாயிறன்று தனியார் கல்லூரியில் தேர்வு எழுதினார். அப்போது தேர்வு அறை நுழைவுச் சீட்டின் பின்பக்கத்தில் எழுதி வைத்து காப்பியடித்ததாக தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மீனச்சல் ஆற்றில் உள்ள சேர்ப்புங்கல் பாலம் அருகே மாணவியின் சடலத்தை திங்களன்று காவல்துறையினர் மீட்டனர். அஞ்சு பி ஷாஜி எம்.ஜி பல்கலை கழகத்தின் பி.காம் தேர்வை தனித்தேர்வராக எழுதினார். தனது மகள் ஒருபோதும் காப்பியடிக்க மாட்டார் எனவும் மரணத்தில் கல்லூரி முதல்வரின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் மாணவியின் தந்தை கேட்டுக்கொண்டார்.
மகளிர் ஆணையம் தலையீடு
கல்லூரி மாணவி அஞ்சு பி ஷாஜி மரணம் குறித்து கேரள மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மகளிர் ஆணைய உறுப்பினர் இ.எம்.ராதா இதற்கான உத்தரவிட்டார். சம்பவத்தின் உண்மை நிலை குறித்து கோட்டயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை கோர உள்ளதாகவும் ராதா கூறினார்.