கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆட்சியராக (துணை ஆட்சியர்) ஸ்ரீதன்யா சுரேஷ் நேற்று கோழிக்கோடு மாவட்டத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வயநாட்டின் பொழுதனா பஞ்சாயத்தை சேர்ந்த ஸ்ரீதன்யா பழங்குடியினத்தில் குறிச்சியா பிரிவைச் சேர்ந்தவர். வயநாட்டில் உள்ள தரியோடு கிராமத்தில் நிர்மலா அரசுப் பள்ளியில் படித்த ஸ்ரீதன்யாவின் பெற்றோர் தினக்கூலிகளாக இருந்து வருகின்றனர். தரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த ஸ்ரீதன்யா, கோழிக்கோடு புனித ஜோஸப் கல்லூரியில் விலங்கியல் இளங்கலைப் பட்டமும், காலிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பயின்றார். இவர் கடந்த 2018ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேசிய அளவில் 410 வது இடத்தை பிடித்தார். இதையடுத்து ஐஏஎஸ் பயிற்சி முடிந்து திருவனந்தபுரம் வந்த ஸ்ரீதன்யா சுரேஷ் கடந்த 2 வாரங்களாக தனிமை முகாமில் இருந்தார். இந்நிலையில் நேற்று கோழிக்கோடு வந்தவர் ஆட்சியர் சாம்பசிவாராவ் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில் ஆட்சியர் ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், ''சமூகரீதியாக இருந்த பிற்போக்கை மீறி, போராடி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதன்யா வந்துள்ளது மகிழ்ச்சி. பல வண்ணக்கனவுகளோடு வந்துள்ள அவருக்கு வாழ்த்துகள். அவரின் சாதனை எதிர்காலத்தில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.