கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடகம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கரகம், தப்பாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், பம்மை ஆட்டம், பொம்மலாட்டம், பாவைக் கூத்து உட்பட 20க்கும் மேற்பட்ட கலைகளில் மாவட்டம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்ககள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பாரம்பர்யமாகவும், மிக குறைந்தவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் இக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், இந்த கலைகள் அழியாமல் காத்திடும் வகையிலும், சமூக சிந்தனையுடனும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சில நிகழ்ச்சிகள் அரசு ஆதரவுடனும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கலைஞர்களுக்கு நிகழ்ச்சிகள், வாய்ப்புகள், வருமானம் என்பதெல்லாம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என 4 மாதங்கள் மட்டுமே. தொழில் போட்டிகளுக்கிடையில் இந்த 4 மாத வருமானத்தை வைத்துத்தான் ஒரு வருட மருத்துவம், குழந்தைகள் கல்வி, சாப்பாட்டு செலவுகள் என வாழ்வாதாரத்தை ஓட்ட வேண்டும். இதில் அரசின் கலை பண்பாட்டுத் துறையில் பதியப்பபட்டவர்கள் சுமார் 1,700 பேர். பதியப்படாதவர்கள் 2,000க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பதிவு செய்யப்பட்டவர்களில் 40 விழுக்காட்டினருக்கு மட்டுமே அரசின் நிவா ரணத் தொகை 2 ஆயிரம் ரூபாய் 2 தவ ணைகளாக கிடைத்துள்ளன. பதியப்பட்டும் நிவாரணம் கிடைக்காதவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல அமைப்புகள் சார்பில் பருகூர், கிருஷ்ணகிரி ஓசூர் பகுதிகளில் உள்ள சுமார் 200 பேருக்கு நிவராணப் பொருட்களும், கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா உதவியில் ரூ. 4,000 வீதம் 40 பேருக்கு நிவாரண உதவியும், மாற்று ஊடக மைய இயக்குனர் காளீஸ்வரன் மூலம் 40 பேருக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. ரேசன் கடைகளிலும் பொதுமக்களுக்காகான உணவுப் பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இனி வரும் கடுமையான அடுத்தடுத்த மாதங்களில் குடும்பச் செலவுகளுக்கு என்ன செய்வதென்ற மிகப் பெரும் கேள்வியுடன் சுமார் 4,000 கலைஞர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை உள்ளது.
எனவே நாடக நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை மார்ச் முதல் வழங்க வேண்டும். தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை மூலம் நிவாரண பொருட்கள், உதவித் தொகை வழங்க வேண்டும். 60 வயதை கடந்தவர்களுக்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயும், இயற்கை எய்தினால் அந்த குடும்பத்திற்கு10 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும். நல வாரிய உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அனைத்து நலத் திட்டங்களும் நாடக நாட்டுப்புற கலைஞர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்திரன்