இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதற்கு தயாராகும்போது, கலீல் அகமது வீசிய பவுன்சர் பந்து விஜய் சங்கரின் முழங்கையை பலமாக தாக்கியது. இதில், விஜய் சங்கருக்கு அதிர்ஷ்டவசமாக முறிவு ஏதும் ஏற்படாததால், காயத்தில் இருந்து உடனடியாக மீண்டார். இருப்பினும், தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறாத விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பிடித்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதை அடுத்து, நாளை மறுநாள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அணி களம் இறங்கும் நிலையில், இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, விஜய் சங்கர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, பும்ரா வீசிய யார்க்கர் பந்து, விஜய் சங்கரின் கால் விரல்களை பலமாக தாக்கியது. இதை தொடர்ந்து, வலியில் துடித்த விஜய் சங்கரை, மருத்துவ குழு பரிசோதித்த பின்னர் முதலுதவி அளித்தனர். அதேபோல், இன்றைய பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட போதிலும், அடிக்கடி பிசியோ எடுத்துக் கொண்டார் விஜய் சங்கர். இநிலையில், அவர் நாளை மறுநாள் நடக்க இருக்கும் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் கூறுகையில் கவலைப்படும்படி விஜய் சங்கருக்கு பெரிய காயம் இல்லை என தெரிவித்துள்ளது.