கர்நாடக பிரீமியர் லீக் சூதாட்டம்
ஐபிஎல் தொடருக்குப் போட்டியாகக் கடந்த 2009-ஆம் ஆண்டு கர்நாடக கிரிக்கெட் சங்கம் கேபிஎல் என்ற பெயரில் கர்நாடக பிரீமியர் லீக் டி-20 தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தொடரின் நடப்பாண்டு சீசன் (2019-2020) இறுதி ஆட்டத்தில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஹூப்ளி டைகர்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் படத்தை தட்டிச் சென்றது. இறுதி போட்டியில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணி பேட்டிங் செய்த விதம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான தகவல் வெளியாகியது.
அதன் படி பெல்லாரி அணியின் கேப்டன் கெளதம், அப்ரார் கஸி ஆகியோர் இறுதிப் போட்டியில் நிதானமாக விளையாடுவதற்காக தலா ரூ. 20 லட்சம் பெற்றதாகக் கூறி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முன்னாள் கர்நாடக வீரர்களான கெளதம், அப்ரார் கஸி இருவரும் தற்போது அணி மாறி விளையாடி வரு கின்றனர். கெளதம் கோவா அணிக்கும், கஸி மிஜோரம் அணிக்கும் விளையாடி வருகிறார்கள். இதே கேபிஎல் தொடரில் விளையாடி வரும் நிஷாந்த் சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகச் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கேபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் சூதாட்டம் தொடர்பாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் கர்நாடக கிரிக்கெட் உலகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.