tamilnadu

img

ஜுவென்டஸ் அணியிலிருந்து ரொனால்டோ விலகுகிறார்?

செரி “ஏ” கால்பந்து தொடர் 

இத்தாலி நாட்டின் முக்கிய கிளப் கால்பந்து தொடரான செரி “ஏ” (SERIE A) தொடரில் நட்சத்திர அணியாக வலம் வரும் ஜுவென்டஸ் அணியில் போர்ச்சுக்கல் நாட்டின் கேப்டனும், கால்பந்து உலகின் முன்னணி வீரருமான கிறிஸ்டியான ரொனால்டோ விளையாடி வருகிறார். இந்த செரி “ஏ” தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி, மிலன் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி சுமுகமாக நிறைவு பெற்றாலும், இந்த ஆட்டத்தில் கவலைக்குரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

அதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்பவும் போல முதல் நிமிடத்திலிருந்து கோலடிக்க பல்வேறு முயற்சி செய்து விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் பயிற்சியாளர் மரிசியோ சாரி 55-வது நிமிடத்தில் பவுலோ டைபாலா (அர்ஜென்டினா) என்ற முன்கள வீரரை மாற்று வீரராக களமிறக்கினார். தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை அசத்தலாகப் பயன்படுத்திக் கொண்ட பவுலோ டைபாலா 77-வது நிமிடத்தில் கோலடித்து ஜுவென்டஸ் அணியை வெற்றிபெறச் செய்தார்.  பவுலோ கோலடித்த அடுத்த சில நிமிடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியாளர் மரிசியோ சாரியிடம் தனியாக ஏதோ கூறி மைதானத்தை விட்டு வெளியேறியதாக ஸ்கை ஸ்போர்ட் இத்தாலியா (SKY SPORT ITALIA) செய்தி வெளியிட்டு விவாத பொருளாக மாற்றியது.  எந்த கால்பந்து தொடராக இருந்தாலும் எதிரணி வீரர்களிடம் கைக்குலுக்காமல் போட்டி நிறைவு பெறும் முன் மைதானத்தை விட்டு வெளியேறுவது விதிமீறிய செயலாகும். ரொனால்டோவின் இந்த செயலை செரி “ஏ” நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கையில் களமிறங்கத் தயார் நிலையில் உள்ளது.

காரணம் என்ன?

ரொனால்டோ திடீரென மைதானத்தை விட்டு வெளியேறியதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட 5 நிகழ்வுகள் மூலம் அரங்கேறியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

1.   காயம் காரணமாக வெளியேறியிருக்கலாம் (முழங்கால், இடுப்பு)  
2.  ஒரே வாரத்தில் இரண்டு முறை மாற்று வீரரை தேர்வு செய்து, 
     பெஞ்சில் அமர வைத்ததை அவமானமாக நினைத்து வெளியேறியிருக்கலாம்.
3.  தனக்கு பதில் களமிறங்கிய மாற்று வீரர் கோலடித்தது எரிச்சலை உருவாக்கியிருக்கலாம். 
4.  ஜுவென்டஸ் அணி நிர்வாகத்தில் ஏதெனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.
5.  மாற்று வீரர் களமிறங்கிய விஷயத்தில் பயிற்சியாளருடன் ஏதேனும் மோதல்  ஏற்பட்டிருக்கலாம்.

பல ஆயிரம் கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) செலவு செய்து ரியல் மாட்ரிட் அணியிலிருந்து ரொனால்டோவை வாங்கிய ஜுவென்டஸ் அணி, மைதான வெளியேறிய நிகழ்வால் கடும் கடுப்பில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கண்ட நிகழ்வுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்  ரொனால்டோ  ஜுவென்டஸ் அணியிலிருந்து வெளியேறும் முனைப்பில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.