tamilnadu

காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

காஞ்சிபுரம், ஜூன் 1-காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பணை அமைக்கவேண்டும், பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கக் கூடத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் 2017-18 ஆம் ஆண்டில் பயிர் காப்பீடுசெய்து இருந்தும் தங்களுக்கு  காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். இதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் தொகை பெறாத விவசாயிகளின் பட்டியலை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஒவ்வொருவிவசாயிகளும் தங்கள் பகுதியில் காப்பீட்டுத் தொகை செலுத்தி இன்சூரன்ஸ் தொகை பெறாதவர்களின் பட்டியலைத் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தற்போது விவசாயிகளுக்கு கொடுப்பதற்காக ரூ.1.82 கோடி நிதி வந்துள்ளது. விடுபட்டவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இருக்கும் என்று நம்புகிறோம். அதிலும் விடுபட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு கூறுகையில்,‘காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும். விவசாயிகள், மழை இல்லாத காலங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைக்க கடன் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும், பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் வணிகர்களால் விவசாய நிலங்களுக்கான பாதை மறிக்கப்படுகிறது. அதனை தடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர்என்.சுந்தரமூர்த்தி, வேளாண்மைத் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.