செங்கல்பட்டு, ஆக.14- காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் புதிதாக துவங்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2019-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கீழ்க்காணும் தொழிற் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. குளிர்பதனம் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல், இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனம் பழுது பார்த்தல், பற்ற வைப்பவர், இல்ல பராமரிப்பு , கருவி மற்றும் அச்சு செய்பவர் உள்ளிட்ட தொழிற் பிரிவுகளில் சேர விருப்பும் மாணவர்கள் http://www.skilltraining. tn.gov.in/det/ என்ற இணையதளம் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தினை தேர்வு செய்து 20.08.2019 வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு:- 14 முதல் 40 வயது வரை, மகளிருக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மாவட்ட கலந்தாய்விற்கான தேதி விவரம் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் தொழிற் பிரிவுகளை மாவட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யலாம். இவ்வாறு தெறிவித்துள்ளார்.