கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து கலவரம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரியநெசலூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தாா்
இந்த நிலையில், ஸ்ரீமதி கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா். இதைதொடர்ந்து பெற்றோா், உறவினா்கள், மற்றும் பொதுமக்கள் கடந்த 5 நாள்களாக மாணவி மரணத்துக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதோடு, மாணவியின் உடலையும் வாங்க மறுத்து வருகின்றனா். இந்நிலையில், இன்று ஆறாவது நாளாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அதிக அளவிலான பொதுமக்கள் கூடியதால், போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் பள்ளியின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கியதில் டிஐஜி பாண்டியன் உள்பட சுமார் 20 காவலர்கள் காயம் அடைந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நுழைந்து கற்களை வீசித் தாக்கி சூறையாடினர். இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுப்படுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவி மரணம் குறித்த வழக்கில் விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வன்முறையை கை விட்டு அமைதி வழியில் போராட உயிரிழந்த மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அமைதியான முறையிலேயே நீதியை பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.