பரிசாக கிடைத்த ரூ.6.4 லட்சத்தை பள்ளியில் காம்பவுண்டு சுவர் கட்டுவதற்காக வழங்க முன்வந்த மாணவருக்கு, கல்வி அமைச்சர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகாவில் உள்ள கட்டாயா பகுதியைச் சேர்ந்தவர் கே.என்.தேஜஸ். இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலையில் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நஞ்சப்பா ஒரு விவசாயத் தொழிலாளி. தாயார் கவுரமணி அரசு பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியாளராக உள்ளார். உறவினர் ஒருவர்தான் அவரது கல்வி செலவுகளை கவனித்து வந்தார்.
சமீபத்தில் தேஜஸ் கன்னட டி.வி. நடத்திய வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற தேஜஸ், கேட்கப்பட்ட கேள்விகளில் சரியான பதில் அளித்ததன் மூலம் ரூ.6.4 லட்சத்தை பரிசாக பெற்றார். இதை அடுத்து, தேஜஸ் பரிசு தொகையில் ஒரு பகுதியை தான் படிக்கும் பள்ளியில் காம்பவுண்டு சுவர் கட்டுவதற்கு கொடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறு கூறிய மாணவர் தேஜசுக்கு பாராட்டுகள் குவிந்தது. தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிக்கான கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் பேஸ்புக்கில் மாணவருக்கு பாராட்டு தெரிவித்ததுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.