பெங்களூரில் டிக்டாக் மோகத்தால் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் ஹெட்ஜ்நகரை சேர்ந்தவர்கள் அப்தாப்ஷெரீப் (19), முகமது மாடின் (23). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த தங்களது நண்பரான ஜபியுல்லாகானை சந்தித்து பேசினர். பின்னர் 3 பேரும் சேர்ந்து சன்ன சந்திரா மற்றும் யெலஹங்கா இடையேயான ரயில்வே தண்டவாள பகுதியில் நின்று டிக்-டாக் வீடியோ எடுத்துள்ளனர்.
ஜபியுல்லா கான் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்ற இருவரும் ‘டிக்-டாக்‘ வீடியோவில் நடித்துள்ளனர் . எதிர்பாராத விதமாக அந்த வழியில் வந்த பயணிகள் ரயில் இவர்கள் 3 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் அப்தாப்ஷெரீப், முகமது மாடின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஜபியுல்லா கான் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவம் நடப்பதற்கு 30 நிமிடத்துக்கு முன்னர்தான் அவ்வழியாக ஒரு சரக்கு ரயில் சென்றுள்ளது. அதன் பிறகு பயணிகள் ரயில் வந்துள்ளது. அப்போது லோகோ பைலட் விசில் ஊதி உள்ளார். அதை வாலிபர்கள் கவனிக்காமல் டிக்-டாக்கில் மூழ்கி இருந்ததால் ரயில் மோதி இறந்துள்ளனர் என்றனர்.