tamilnadu

கரூர், பெரம்பலூர், நாகை, தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

ஆதிதிராவிட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை 
குளித்தலை, செப்.29- கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் ராஜேந்திரம் தெற்கு கிராமம் வாளாந்தூரில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு இடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் அமைத்து தரக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் வாளாந்தூர் ஊர் பொதுமக்கள் சார்பாக பாலசுப்பிரமணி தலைமையில் 30-ம் தேதி ஒப்பாரி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து 28-ம் தேதி குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தை கூட்டத்தில் துணை வட்டாட்சியர் தலைமையில் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் குளித்தலை துணை வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், கோரிக்கை தொடர்பாக மயானத்திற்கு சாலை அமைப்பதற்கு ஆதிதிராவிடர் சிறப்பு திட்டத்தின் மூலம் நிர்வாக அனுமதி கோரி மாவட்ட திட்ட இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.  பேச்சுவார்த்தையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜு வி.தொ.ச மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கோமதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு ஆட்டோ ஊழியர் சங்க துவக்க விழா
பெரம்பலூர், செப்.29-பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஆட்டோ ஊழியர் சங்கம் சிஐடியு அகரம்சீகூர் கிளையின் 4 ஆம் ஆண்டு துவக்க விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. முன்னதாக அகரம்சீகூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கிளை தலைவர் சந்திரகாநன் கொடியேற்றி துவக்கி வைத்தார். செயலாளர் வி.கருப்பையா, பொருளாளர் வி.இளம்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பெரம்பலூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை தீரன் நகர் அருகே உள்ள வேலா கருணை இல்லத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 80 பேருக்கு சேலைகள் மற்றும் சட்டைகள் வழங்கி பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் அன்னதானத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சி.சண்முகம், மா.செயலாளர் எ.ரெங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.அழகேசன் மற்றும் நிர்வாகிகள் பெ..கருப்பையா ஆறுமுகம, சின்னசாமி, சின்னதுரை, சிலம்பரசன், பாலமுருகன், தங்கவேல் செந்தில், தென்னரசு, சங்கர், செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு கிராம சபா கூட்டம்
சீர்காழி, செப்.29-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இரண்டாவது ஆறு மாத காலத்தில் நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கைச் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. தற்காலிக கவுரவத் தலைவர் சுந்தரி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் கண்ணன் வரவேற்றார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முத்து, சமூக தணிக்கையின் அவசியம் குறித்து பேசினார். கூட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கடந்த ஆறு மாத காலங்களில் நடைபெற்ற பல்வேறு பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை உள்ளிட்ட விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊழியர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் திட்டப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சோழராஜன் நன்றி கூறினார்.

மாதானம் பாசன வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை
சீர்காழி, செப்.29- நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம், பச்சபெருமாநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் புதுமன்னை ஆறு, தில்லாய்க்கால், பாப்பன் வாய்க்கால், இரட்டை வாய்க்கால்  உள்ளிட்ட கிளை வாய்க்கால் மூலம் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பயன்பாடு உள்ளதாக அமைகிறது. இப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் மழைக் காலங்களில் அதிக அளவில் தேங்கும் நீரை விரைவில் வெளியேற்றும் சிறந்த வாய்க்காலாக இந்த வாய்க்கால் இருந்து வருகிறது. மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு 20 க்கும் மேற்பட்ட நாட்களை கடந்தும் பிரதான பாசன வாய்க்கால்களில் வந்த தண்ணீரின் அளவும் குறைந்து போயுள்ளது. ஆனால் பாசன கிளை வாய்க்கால்களில் தண்ணீரும் வரவில்லை. கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் மிகவும் கடை நிலையில் உள்ள பாசன கிளை வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படவில்லை. இதனால் மாதானம் பாசன கிளை வாய்க்காலில் முள்செடிகள் வளர்ந்து மண்டி கிடக்கிறது. வாய்க்கால் சுமார் 2 கிமீ தூரத்துக்கு தூர்ந்து போயுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி, சம்பா பயிர் சாகுபடி பணி நடைபெறும் இந்த நேரத்தில் சாகுபடி பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தும் வகையில், மாதானம் பாசன கிளை வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்செடிகளை உடனடியாக அகற்றி வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு பேரணி 
தஞ்சாவூர் செப்.29- தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமை அன்று துவக்கி வைத்தார். முன்னதாக, நெகிழி ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். காந்தி பிறந்த நாளான அக்.2 முதல் மத்திய அரசால் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், சுகாதார ஊக்குனர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி ஆர்.ஆர்.நகர் வழியாக குழந்தை இயேசு கோயில் மைதானத்தில் நிறைவடைந்தது.