கரூர், மே 11- அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர்வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து க.பரமத்தியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்று பேசுகையில், இந்தியாவிலேயே பாஜகவை எதிர்க்கும் மாநிலமாக தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மோடி வேறு, இந்த ஓபிஎஸ்-இபிஎஸ் ஜோடி வேறல்ல. மோடிதான் சூத்திரதாரர். அவர் கையில் தான் நூல்இருக்கிறது. அவர் நூலை ஆட்டினால் இந்த ஜோடி ஆடும்.இது ஒரு பொம்மலாட்டம் ஆட்சி.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இருவரதுகையிலே சிக்கிக் கொண்டு அவர் முதல்வரா,இவர் முதல்வரா என போட்டி நடந்து இப்போது இருவரும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஜோடியாக தமிழகத்தை சூறையாடுகிறார்களே ஒழிய, தமிழகத்தில் இந்த இரண்டு, மூன்றாண்டுகளாக எந்த திட்டமும் நிறைவேறவில்லை.கருணாநிதி அரசு என்றவுடன் நினைவுக்கு வருவது விவசாயிகளின் ரூ.7ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி தான். ஆனால் அதிமுகஅரசு என்றால் நினைவுக்கு வருவது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, பொள்ளாச்சி பாலியல் சம்பவம், மணல், கிரானைட் கொள்ளை போன்றவை தான் நினைவுக்கு வருகிறது. எரிவாயு தோண்டுகிறேன் எனக் கூறி நெடுவாசலிலே பசுமையான விளை நிலங்களை தோண்டியது நினைவுக்கு வருகிறது. இதனால்தான் இந்த ஜோடியை விரட்டநீங்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
நீட் தேர்வை ஏன் ஓபிஎஸ்- இபிஎஸ் ரத்து செய்யவில்லை. உண்மையிலே அதிமுக அரசுக்கு தமிழக மாணவர்களின் நலன் முக்கியம் என்றால் மத்திய அமைச்சர்கள் பியூஸ்கோயல், ஜாவ்டேகருக்கு எதிராக ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அறிக்கை தந்திருக்க வேண்டாமா, இல்லையா. நீ யார் சொல்வதற்கு நாங்கள் கட்டிய அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர்களை சேர்க்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என சொல்வதற்குதிராணி இல்லாத, தெம்பு இல்லாத அதிமுகஅரசு இருந்து என்ன, இல்லாமல் இருந்தென்ன? தமிழனுக்கு சுயமரியாதையை கற்றுக்கொடுத்தவர் பெரியார். அவர் திமுகவிற்கும், காங்கிரசுக்கும் பாட்டன். பெரியார்,பேரறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் சொல்லிக் கொடுத்தது சுயமரியாதை, தன்னம்பிக்கை, பெண்கள் மீது சுமத்தப்படும் இழிவுகளுக்கு முடிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு. இதைத் தானே கற்றுக் கொடுத்தார்கள். சுயமரியாதை இழந்து ஒரு ஜோடி தமிழகத்தை நடத்துகிறார்கள் என்றால் இந்த ஆட்சி தொடர வேண்டுமா, முடிய வேண்டுமா என நிர்ணயிக்கிறது தான் இந்ததேர்தல். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். முன்னதாக கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி தலைமைவகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் கே.கருணாநிதி வரவேற்றார். மதிமுக மாவட்டச்செயலாளர் கபினி சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, காங்கிரஸ் செயல்தலைவர் விஷ்ணுபிரசாத், கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் விவசாய பிரிவு மாநிலச் செயலர்ராஜ்குமார் நன்றி கூறினார்.