நாகர்கோவில், ஜுன் 15- பார்வதிபுரம் பகுதியில் செல்லும் அனந்தனாறு கால்வாயில் பாசனத்திற்காக அணைகள் திறக்கப்படும் போது அதிக தண்ணீர் செல்வது வழக்கம். இந்த கால்வாய் செல்லும் இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் தண்ணீர் பெற்று வருகின்றன. மேலும் பார்வதிபுரம், ஆலம்பாறை , கணியாகுளம் உள்பட சுற்றுவட் டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இலந்தேரித்தட்டு என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த படித்துறையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து ஜெ.கே. கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் நடத்தி வரும் தனிநபர் காங்கிரீட் போட்டு இரவோடு இரவாக மூடியுள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கதுடன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மலைவிளை பாசியை அவமதித்து வடசேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் தாக்க முயன்றுள்ளார். இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட படித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், என்.எஸ்.கண்ணன், என்.உஷா பாசி ஆகியோர் திங்களன்று பார்வையிட்டனர்.
பின்னர் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அனந்தன் கால்வாயில் இலந்தேரித்தட்டு பகுதியில் பல்லாண்டு காலமாக கிராம மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்த படித்துறையை இரவோடு இரவாக இடித்து தடையமில்லாமல் மாற்றி கான்கிரீட் போட்டு மக்கள் பயன்படுத்த முடியாமல் ஆக்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு அப்பகுதி மக்கள் திரண்டனர். அப்போது அங்கிருந்த வடசேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து பொது மக்களை தாறுமாறாகவும், மிகவும் தரக்குறைவாகவும் பேசியுள்ளார். இப்படி ஏன் நடந்து கொள்கிறீர்கள் என உதவி ஆய்வாளரிடம் மலைவிளைபாசி கேட்டுள்ளார். அவரை சட்டை காலரோடு சேர்த்து பிடித்து இழுத்து இவனை வண்டியில் ஏற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். அங்கு கூடியிருந்த பொது மக்கள் அனைவரும், ரியல் எஸ்டேட் உரிமையாளர் அவருடைய வசதிக்கு படித்துறையை மாற்ற முயற்சிப்பதுடன், அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தது குற்றமல்லவா எனவும், நியாயம் கேட்டதற்கு மலைவிளை பாசியை வண்டியில் ஏற்றுவீங்களா எனவும் கேட்டபோது, சட்டை காலரிலிருந்து அவர் கைப்பிடியை விட்டுள்ளார். மலைவிளை பாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் என தெரிந்தே உதவி ஆய்வாளர் அனில்குமார் பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். எனவே, மிகத் தவறான செயலில் பொதுமக்களிடமும், கட்சி தலைவரிடமும் நடந்து கொண்ட உதவி ஆய்வாளர் அனில்குமார் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.