tamilnadu

எச்.வசந்தகுமார் எம்.பி.,  மறைவுக்கு  சிபிஎம் - தலைவர்கள் இரங்கல்

நாகர்கோவில், ஆக.29- கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான எச்.வசந்தகுமார் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் வெள்ளியன்று  மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு ஞாயிறன்று அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் நடைபெறுகிறது.  அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எச்.வசந்த்குமார் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்பி எ.வி.பெல்லார்மின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வசந்த் & கோ நிறுவனங்களின் நிறுவனருமாகிய சகோதரர் எச்.வசந்த்குமார் மரண செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. தேர்ந்தெடுத்த தொழிலிலும், அரசியலிலும் படிப்படியாக முன்னேறி வெற்றியாளராக திகழ்ந்தவர். பழகுவதற்கு இனிமையான பண்பாளர். அவர் இழப்பால் வேதனையுறும் அவரது குடும்ப உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.