tamilnadu

img

கடலூரில் ரூ.50 க்கு காய்கறி தொகுப்பு:  அசத்தும் சிபிஎம் தோழர்


கடலூர்,ஏப்.14-
கடலூர் நகரில் நகராட்சி சார்பில் 50 ரூபாய்க்கு காய்கறி தொகுப்பினை வீடுகள் தோறும் வழங்கி மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் நகர் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் அசத்தி வருகிறார். 
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தி உள்ளன. இந்த ஊரடங்கால் சாதாரண மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. வாழ்க்கைத் தரம் படுமோசமான நிலைக்கு சென்று உள்ளது. 
அன்றாடம் வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் தினக்கூலி தொழிலாளர் கள்,  உழைப்பாளர்களும் சொல்லமுடியாத சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகமும், கடலூர் நகராட்சியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகர நிர்வாகத்தின் சார்பில் கடலூரில் காய்கறி மொத்த விற்பனையாளர் எஸ்கேபி நிறுவனத்தின் சார்பில் எஸ்.கே.பக்கிரான் 100 ரூபாய் தொகுப்பில் காய்கறிகளை வழங்கி வந்தார். கடலூர் நகரம் முழுக்க தினமும் ஆயிரம் பை காய்கறி தொகுப்புகளை கடந்த 15 நாட்களாக வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் மற்ற வியாபாரிகள் சிலர் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ததை மாவட்ட ஆட்சியரே நேரடியாக ஆய்வு செய்து எச்சரிக்கை செய்தார். அதன் பின்னர், வெளி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சிறிது சிறிதாக  குறையத் தொடங்கின.
இதுகுறித்து எஸ்.கே.பக்கிரான் கூறுகையில்," முதல் இரண்டு நாட்கள் மக்கள் காய்கறிகள் வாங்கும்போது 500 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை மாற்றிக்கொண்டு வாங்கினார்கள். கடந்த இரண்டு நாட்களாக மக்கள் வாங்கும் சக்தியை  இழந்துள்ளனர்" என்றார்.
 தற்போது 100 ரூபாய்க்கு காய்கறி வாங்க மக்கள் ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய், காசுக்காக கொடுக்கின் றார்கள். இது அவர்கள் வீடுகளில் சிறுக சிறுக சேமித்து வைத்த உண்டியல் பணம் போன்று தெரிகிறது. மக்கள் நூறு ரூபாய் கொடுத்து கூட காய்கறி வாங்க முடியாத அளவிற்கு மக்கள் வாங்கும் சக்தியை இழந்து நிற்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. 
 எனவே இந்த மக்களுக்கு 50 ரூபாய் விலையில் காய்கறி தொகுப்பை கொடுக்கலாம் என்று முடிவு செய்து அதன் அடிப்படையில்  செவ்வாய்கிழமை முதல்  50 ரூபாயில் ஒரு கிலோ வெங்காயம், ஒரு கிலோ தக்காளி, புடலங்காய், கத்தரிக்காய், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை கொத்தமல்லி என  மூன்றரை கிலோ எடையிலான காய்கறி தொகுப்பினை வழங்கி வருகின்றேன். லாப நோக்கம் இல்லாமல் சேவை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி தோழரின் தன்னலமற்ற மக்கள் நலன் சார்ந்த இந்த பணியை கடலூர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.