கடலூர், ஆக. 6- ரூ.500 சேவைக்கட்டணமாக பெற்று கடலூரில் இ-பாஸ் பெற்றுத்தருவதாக ஆடியோ வெளியிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியத் தேவைகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இதற்கென பிரத்யேகமாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இ-பாஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டு திருமணம், மருத்துவம், இறப்பு போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த இ-பாஸ் விண்ணப்பிப்பதற்காக தற்போது கணினி மையங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு வாட்ஸ்ஸப் குழுக்களில் ஒரு ஆடியோ பரவியது.
அதில் கடலூரில் டிராவல்ஸ் நடத்தி வரும் நான் இதுவரை கடலூரில் 50 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வாங்கிக் கொடுத்துள்ளேன். இதற்கான சேவைக்கட்டணமாக ரூ.500 மட்டும் பெற்றுக்கொள்கிறேன். எனவே வாடகைக்கு வாகனங்கள் இயக்குபவர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தனது தொலைபேசி எண்ணையும் அதில் வெளியிட்டுள்ளார். சரியான காரணங்கள் தெரிவித்தும் ஏராளமானவர்களின் இ-பாஸ் நிராகரிக்கப்படும் நிலையில் ஒருவர் மட்டுமே 50 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் பெற்று வழங்கியிருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ.அபிநவ் கூறுகையில், ஆடியோ வெளியிட்ட கடலூர் சாவடியைச் சேர்ந்த 24 வயது இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை அடுத்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட கோண்டூரை சேர்ந்த ராஜாராம், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.