ஒடிசாவில் நாளை பானி புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிதீவிர புயலாக மாறியுள்ள பானி புயல், புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்கத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல், பானி புயல் காரணமாக, ஒடிஸாவின் 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தளர்த்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 43- க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.