கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் தட்டாரத் தெருவை சேர்ந்தவர் தனசேகர், கேஸ் வெல்டிங் தொழில் செய்து வரும் இவர், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் இடத்தை அளக்க சர்வேயரை அழைத்து வர வேண்டும் என்று மனு செய்துள்ளார்.
இந்நிலையில் சர்வேயர் மோகனாம்பாள், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர்கள் தனசேகரன் வீட்டிற்கு வந்து இடத்தை பார்த்தனர். அதன்பின் தனசேகரை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும்படி அழைத்து சென்றனர். அப்போது இடத்தை அளவீடு செய்து சான்று கொடுக்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டனர். அப்போது தன்னிடமிருந்த ரூ.3000 மற்றும் நண்பர்கள் உறவினர்களிடம் ரூ.3000 கடன் வாங்கி மொத்தம் 6 ஆயிரம் மட்டுமே உள்ளதாக கூறி பணத்தை தனசேகர் கொடுத்தார்.
அதற்கு நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், மீதம் நான்காயிரம் தந்தால் மட்டுமே அளவீடு செய்து சான்று தரப்படும் என தெரிவித்தனராம். இதனால் அதிர்ச்சி அடைந்த தனசேகருக்கு அங்கேயே நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே அமர்ந்தவர் அங்கேயே இறந்தார். இதுபற்றி அவரது மகன் சுதர்சன், திருவிடைமருதூர் காவல்துறையில் புகார் செய்தார். இதன் பேரில் விசாரணை நடைபெறுகிறது.