புதுக்கோட்டை, நவ.2- எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளங்களில் இருந்து சுமார் 300 விசைப்படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமையன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் எம்.ராஜ்குமார் (34), எஸ்.மோகன் (28), என்.நாகராஜ் (30) மற்றும் ஆர்.மைக்கேல் (34) ஆகியோரும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து பி.வாசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் எ.தினேஷ் (24), எம்.சாரதி (35), கே.அரவிந்த் (23), வி.சிவகுமார் (30) ஆகியோரும் நெடுந்தீவு பகுதியில் நேற்று மீன் பிடித்துள்ளனர்.
அப்போது, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறை கடற்படை தளத்தில் விசாரணை மேற்கொண்டனர்.