எண்ணெய் கசிவு விபத்துகளை கட்டுப்படுத்துவதில் போதாமை இருப்பதாக ஓ.என்.ஜி.சி. மீது பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது.
நடந்த விபத்துகள் :
1. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தையடுத்த கீழ எருக்காட்டூர் பகுதியில், செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பருத்தி விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயலில் கச்சா எண்ணெய் கசிந்தது.
ஓ.என்.ஜி.சி நிறுவனம் மூலம் அங்குள்ள விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட்டு அருகில் உள்ள வெள்ளக்குடி பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் அவை சேமிக்கப்பட்டு வருகின்றன.
குழாயில் ஏற்பட்ட கசிவால் தனது 2 ஏக்கர் நிலம் பாழ்பட்டதாக விவசாயி செல்வராஜ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்தாண்டு ஏப்ரல் 30-ம் தேதி அன்று, திருவாரூர் மாவட்டம் புலிவலம் வடக்குத் தெருவில் உள்ள ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் - எரிவாயு எடுக்கும் கிணற்றிலிருந்து பெரும் வெடிச்சத்தத்துடன் எரிவாயு வெளியேறியது.
2. இதே போன்ரு இந்தாண்டு ஏப்ரல் மாதம் புலிவலத்தில் நடந்த விபத்தில் உடைப்பு ஏற்பட்ட 2.1 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதிக்கப்பட்ட குழாய் மாற்றப்பட்டது. நில உரிமையாளருக்கு இழப்பீடாக 10,868 ரூபாய் வழங்கப்பட்டது .
3. கடந்தாண்டு கீழ எருக்காட்டூரில் நடந்த விபத்தில் விளை நிலத்தில் ஒன்றரை மீட்டர் ஆழத்தில் 4 டிராக்டர் அளவிற்கு மாசடைந்த மண் அகற்றப்பட்டது.
விபத்தில் நில உரிமையாளருக்கு 50,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நிலத்தை மறு சீரமைப்பு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டு கொரோனா ஊரடங்கின் காரணமாக பணிகள் தொடங்காமல் உள்ளதாகவும், சேதமடைந்த 7.5 தூரத்திற்கான குழாய் மாற்றப்பட்டதாக ஓ. என்.ஜி.சி விளக்கமளித்தது.
என்ன இந்த மீத்தேன் வாயு திட்டம்..?
மீத்தேன் வாயு திட்டம் ஒன்றிய அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டமாகும். இதன் நோக்கம் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் கண்டறியப்பட்டுள்ள மீத்தேன் வாயுவைக் கிணறுகள் அமைத்து எடுப்பதாகும். இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
குறிப்பு:
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க 2010 ஆம் ஆண்டு கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு ,விவசாயிகள் மீத்தேன் எரிவாயு எடுக்க கடுமையாக எதிர்த்ததால் ,2011 மே மாதத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெ. ஜெயலலிதா அம்மையார் தற்காலிகமாக இந்த திட்டத்திற்கு 2013 ஜூலை மாதத்தில் தடை விதித்தார்.
ஹைட்ரோகார்பன் :
பூமிக்கு அடியில் இவைகள் பாறைகளின் இடுக்குகளில் ஆங்காங்கே ஏராளமாக ஹைட்ரோகார்பன் தேங்கி நிற்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. அவ்வாறு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தமிழ்நாடு ஒன்று. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரை அதிக அளவில் ஹைட்ரோ கார்பன்கள் பூமிக்கு அடியில் இருக்கின்றன.இவற்றை தோண்டி எடுக்கும் பணிகளை மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்கள் செய்து வந்தன.
எதிர்ப்பு:
இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நிலத்தடி நீரே கிடைக்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக அந்த பகுதி விவசாயமே அழிவு நிலைக்கு தள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறும். இவை காற்றில் கலந்து சுற்றுப்புற சூழலை முற்றிலும் நாசமாக்கிவிடும். மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். செடி, கொடிகள் என இயற்கைகளையும் நாசமாக்கிவிடும். விவசாயம் இல்லாத பாலைவன பகுதி அல்லது மக்கள் அதிகம் பயன்படுத்தாத பகுதி ஆகியவற்றில் இந்த கிணறுகளை தோண்டினால் அதனால் பெரிய அளவில் பிரச்சினைகள் வராது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவற்றை உருவாக்கும்போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே விவசாய்கள் இதனை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
குறிப்பு:
தமிழக அரசின் அனுமதியின்றி ”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் ,வரும் காலங்களில் திட்டத்திற்கு ஆய்வு நடத்த முடியாது, எரிவாயும் எடுக்கவும் முடியாது” என்று அமைச்சர் சி.வி.சண்முகம்(2019) திட்டவட்டமாக தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்குமா அரசு..?
மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வர முயல்வதும் அதனை தமிழக விவசாயிகள் மற்றும் எதிர் கட்சிகள் எதிப்புக்கு பின்னர் தமிழக அரசு அதனை தடை செய்ய முயல்வதும்,தற்க்காலிகமாக தடை விதிப்பது வாடிக்கையாக உள்ளது.
ஆனால் ஏற்கனவே திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம், ஹைட்ரோகார்பன் எடுப்பது நிறுத்தப்பட்டாலும் ,நிறுவனங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் எண்ணை கசிவு நடக்க வாய்ப்புள்ளது.எனவே மத்திய ,மாநில அரசுகள் இதை உணர்ந்து ,விபத்து ஏற்பட்ட உடன் அதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதை விட ,அத்தகைய விபத்து நடப்பதற்கு முன்னே அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமா...?