மதுரை, ஆக. 31 - தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதில் உயரதிகாரிகள் காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தற்காலிப் பணியாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:- கால்நடைத்துறையில் தமிழகம் முழுவதும் சுமார் 6,984 தற்காலிகப் பணியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் கால்நடைத்துறையின் சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து ஊதியச் சான்று பெற்று அதைக் கருவூலத்தில் சமர்ப்பித்து சம்பளம் பெறுவது வழக்கம். அதுவும் பிரதிமாதம் 4 முதல் 5 தேதிகள் ஆகிவிடுகிறது. மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வழங்கவேண்டுமென்ற கோரிக்கையை தலைமைச் செயலர் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளவில்லை. உதாரணத்திற்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தை அதிகாரிகள் (ஆக.30)வெள்ளிக்கிழமை பெற்றுவிட்டார்கள். ஆனால், தற்காலிகப் பணியாளர்களுக்கான ஊதியச்சான்றை ஆக.30-ஆம் தேதி வரை அனுப்பவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் ஆகஸ்ட் மாத சம்பளத்தை செப்.6-ஆம் தேதிக்குப்பின்னர் தான் பெறமுடியும். உயரதிகாரிகளின் தாமதத்தால் வீட்டுவாடகை, வங்கியில் பெற்றுள்ள தனிநபர் கடன் ஆகியவற்றை குறித்த காலத்தில் செலுத்தமுடியவில்லை. தற்காலிகப் பணியாளர்களுக்கும் மாதத்தின் இறுதி நாளில் சம்பளம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்றனர்.