tamilnadu

img

உத்திரமேரூர் அருகே சோழர் கால சிலை கண்டெடுப்பு

உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரிலிருந்து எல். எண்டத்தூர் செல்லும் வழியில் உள்ளது பட்டஞ்சேரி கிராமம்.  இக்கிராமத்தில் 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் கால பைரவர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவருமான சு. பாலாஜி தலைமையில் கோகுல சூரியா, சங்கர் ஆகியோர் கள ஆய்வுவினை மேற்கொண்டனர். அப்போது, பட்டஞ்சேரி கிராம வயல்வெளி பகுதியில் ஆய்வு செய்தபோது ஒரு சிலை கண்டெடுத்தனர். சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒன்றான பைரவர் சிலையாகும் இது. சிவன் கோவில்களில் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் ஆடைகள் ஏதுமின்றி நிர்வாண நிலையில் நாயை வாகனமாகக் கொண்டு காட்சியளிப்பதாகும்.

இந்த சிலை குறித்து பாலாஜி மேலும் கூறுகையில்,“ நான்கு அடி உயரமும். ஒன்றரை அடி அகலமும் கொண்டது இந்த சிலை. இதன் உருவ அமைப்பானது தலையில் ஜடா மகுடத்துடன் அதன் குண்டலமும், இடது காதில் பத்தர குண்டலம் எனும் பனை ஓலையிலான அணிகளனும் உள்ளது” என்றார்.கழுத்தில் எழில்மிகு ஆபரணங்கள் அழகு செய்ய பைரவர் நின்ற கோலத்தில் உள்ளது. இச்சிலையின் கால் முழங்கால் பகுதி மண்ணில் புதைந்துள்ளது. இதை உள்ளூர் மக்கள் காத்தவராயன் என்கின்றனர். உண்மையில் இது 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த பிற்கால சோழர் கால சிலையாகும். உத்திரமேரூர் நீண்டகாலமாக சோழ மன்னர் கள் ஆட்சி செய்த பகுதியாகும். அந்த காலத்தில் இந்த ஊரில் ஒரு சிவன் கோயில் இருந்தது. அது. கால வெள்ளத்தால் சிதைவுற்று, அழிந்து இச்சிலை மட்டுமே எஞ்சியிருக்க வாய்ப்புள்ளது என்றும் பாலாஜி கூறினார்.

;