திருவனந்தபுரம், ஜூன் 9- கேரள மாநில என்.ஜி.ஓ.யூனியனின் 56வது மாநில மாநாடு ஜூன் 8ஆம் தேதி திருவனந்தபுரத்தில் கோலாகலமாகத் துவங்கியது. மக்கள் பணிகளை மேலும் திறன்மிக்க முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றும் புதிய கேரளம் நிர்மாணத்திற்காக நம் அனைவரது பங்களிப்பையும் உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் மாநாடு அறைகூவல் விடுத்தது. மக்கள் நலனுக்காக மாற்றுக் கொள்கைகளுடன் முன்னோக்கிச் செல்லும் இடது ஜனநாயக முன்னணி அரசின் வளர்ச்சி நலத் திட்டங்களுக்கு மாநாடு தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொண்டது. திருவனந்தபுரம் ஏகேஜி ஹாலில் நடைபெறும் மாநாட்டை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் துவக்கிவைத்தார். மாநாட்டையொட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பிரதிநிதிகள் மாநாடு தொடர்ந்து நடைபெறும். மாநாட்டின் நிறைவாக செவ்வாய்க்கிழமை மாலை திருவனந்தபுரம் புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கிவைத்து சிறப்புரையாற்றுவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். கேரள என்.ஜி.ஓ யூனியனின் மாநிலத் தலைவராக இ.பிரேம்குமாரும் பொதுச் செயலாளராக டி.ஸி.மாத்துக் குட்டியும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். என்.நிமல் ராஜ் பொருளாளராகவும், ஏ.அப்து ரஹீம், எம்.வி.சசிதரன், டி.பி.உஷா ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் என்.கிருஷ்ணபிரசாத், வி.கே.ஷீஜா, எம்.ஏ.அஜித்குமார் ஆகியோர் செயலாளர்களாகவும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் மாநில மாநாடு தேர்வு செய்தது. டி.எம்.ஹாஜரா, கே.ராஜசந்திரன், எஸ்.சுசிலா, எஸ்.அஜயகுமார், சீமா எஸ்.நாயர்,கே.வாமதேவன், ஆர்.சாஜன், சி.எஸ்.சுரேஷ்குமார், யூ.எம்.நஹாஸ், பி.அனில்குமார் கொல்லம் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.