tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!

பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வெள்ளிவிழா மாநாடு சூளுரை

மதுரை, டிச.15- மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 25-ஆவது வெள்ளிவிழா மாநாடு மதுரையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிலைக்குழு செயலாளர் சஞ்சய் ஜா,  தென் மண்டல பொதுச்செயலாளர் பி.செந்தில்குமார், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கே.சுவாமிநாதன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். வேலையறிக்கையை பொதுச் செயலாளர் வி.ரமேஷ், நிதி நிலை அறிக்கையை பொருளாளர் என்.மோகன் ஆகியோர் தாக்கல் செய்தனர். சகோதர சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். ஞாயிறன்று மாநாட்டை தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த் நிறைவு செய்து வைத்தார். வி.ரமேஷ் நன்றி கூறினார்.

பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஏப்ரல் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சட்டபூர்வமான வரையறுக்கப்பட்ட பென்சன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்பது என முடிவுசெய்யப்பட்டது.