மின் அழுத்தம் குறைவு: அமைச்சர் ஒப்புதல்
சீர்காழி தொகுதி திட்டை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று அதிமுக உறுப்பினர் பி.வி. பாரதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அத்துறைக்கான அமைச்சர் தங்கமணி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் மின் அழுத்தம் குறைவாகத்தான் உள்ளது. அந்த பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்க அரசு நிதி ஒதுக்கினாலும் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது என்றார். உயர்கோபுர மின்கம்பிகளை மாற்றி புதைவட மின்கம்பிகளை அமைக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து வேளாங்கண்ணியில் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.
உருது மொழி ஆசிரியர் பற்றாக்குறை: அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம் சந்தப்பேட்டையில் உள்ள அரசு உருது மொழி பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை பல வருடமாக உள்ளது. சில மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? என்று திமுக உறுப்பினர் க. பொன்முடி துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “ உருது மொழி பேசும் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தகைய ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார். பள்ளி கட்டிடங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் புதிய கட்டிடம் கட்டித்தரப்படாத நிலை உள்ளது குறித்து பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் எஸ்எஸ்ஏ மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 129 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பள்ளிக் கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்” என்றார்.
ரேசனில் கால்நடை தீவனங்கள் வழங்குவது சாத்தியமில்லை
நியாய விலைக்கடைகள் மூலம் கால்நடைகளுக்கான தீவனங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என திமுக உறுப்பினர் ரகுபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பொது விநியோக திட்டம் என்பது மக்களுக்கான திட்டம் என்றும், மக்களுக்கு வழங்கவே நிதி உள்ள நிலையில், கால்நடைகளுக்கு தீவனம் வழங்க சாத்தியமில்லை எனவும் கால் நடைகளுக்கு தீவனம் வழங்க தனித்துறை செயல்பட்டு வருவதாகவும் கூறினார். பொது விநியோக திட்டத்தில் அனைத்து கடைகளிலும் முழுமையான அளவு பொருட்கள் வழங்கி வருவதாகவும் அமைச்சர் கூறிக்கொண்டார்.