கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் மணலூரில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரசாந்தின் தாய் மற்றும் குடும்பத்தினரை தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம், லிகாய் சங்க மாவட்டச் செயலாளர் என்.ராஜா, திருவையாறு ஒன்றிய குழு உறுப்பினர் பிரதீப் ஆகியோர் பிரசாந்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ் கூறுகையில், தான் விரும்பிய பெண்ணை அதுவும் அதே தலித் சமூக உட்பிரிவின் ஒரு சாதியை சேர்ந்தவரை காதலித்த குற்றத்திற்காக கொடூரமாக அடித்து கொன்றுள்ளனர் பெண்ணின் உறவினர்கள். கொலை நடந்து ஒரு வாரம் தான் ஆகிறது, ஆனால் பிரசாந்தின் குடும்பம் இயல்பான சகஜ நிலைக்கு வந்துள்ளது ஆச்சரியமாக இருந்தது. தன் மகன் படுகொலையின் சோகத்தை கூட அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, பேசுவதற்கு கூட சனங்க இல்லாததால் இயல்பு நிலைக்கு வந்துள்ளது பிரசாந்தின் குடும்பம். ஏதுமற்ற விளிம்பு நிலை மக்களின் கதி இது தான்.
பாவம், அழக்கூட தெரியவில்லை. அவர்களுக்கு நடந்த கொடூரத்தை சொல்லவும் தெரியவில்லை. அவர்களிடம் நாதியற்றவர்களுக்கு நம்பிக்கையாய் குரலற்றவர்களின் குரலாய் நாங்கள் இருக்கிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். உங்களுக்கு பாதுகாப்பாய் இருப்போம் என்று பிரசாந்த் குடும்பத்தினரிடம் சொன்னவுடன் அவர்கள் கண்களின் நம்பிக்கை துளிர்த்தது என்றார்.