சென்னை ஏப்.11-
தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் மரணமடையும் நபர்களின் உடல்கள், அரசு மருத்துவ மனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டு, 10 நாட்களுக்குப் பின் அவற்றை உரிய நடைமுறைகளைப் பின்பற்றிப் புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப் படுவதால், இடப்பற்றாக் குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்த சடலங்களைத் தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களைத் தகனம் செய்ய பிற மாநில நீதிமன்றங்கள் அனுமதியளித்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்கு களை காரணம் காட்டி, புதைக்க மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தகனம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சடலங்களின் முடி, ரோமம், நகம் போன்றவை எடுத்துப் பாதுகாக்கப்படுவதால், அடையாளம் காண்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது எனவும், தகனம் செய்வதால் அதிக செலவும் ஏற்படாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது இந்த மனு தொடர்பாக நான்கு வாரக் காலத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.