தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை வரும் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாத காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு பல முறை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கிய நிலையிலும், உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறதாகவும், டிசம்பர் இரண்டாம் வாரம் வரை கால அவகாசம் தர வேண்டும் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் வரும் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு கெடு விதித்துள்ளது.