உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே உள்ளிட்ட 4 நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார். இதையடுத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று கடந்த 14 ம் தேதி உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்த போது தன் கருத்துக்களுக்கு பிரசாந்த் பூஷண் மன்னிப்பு கேட்ட 24ம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
ஆனால் பிரசாந்த் பூஷண் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து 25ம் தேதி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு பிரசாந்த்பூஷண் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மேலும் 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கியது. ஆனால் அவர் தனது கருத்தை பின்வாங்க போவதில்லை என்பதை உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து ஒரு நபர் தான் செய்தது தவறு என்பதை உணர வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு ரூபாய் அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.